வத்தலகுண்டு அடுத்துள்ள கீழக்கோயில்பட்டி கிராமத்தில் சிறுவீட்டுப் பொங்கல் எனப்படும் பூ எருவாட்டி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி கீழக்கோயில்பட்டியைச் சேர்ந்த பெண்கள், வீடுகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் ஒன்று கூடிய பெண்கள் கும்மி பாடல்கள் பாடினர். பெண்களும், சிறுமிகளும் கும்மி பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து விளக்கு, வெற்றிலை பாக்கு, பூ, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை தாம்பூலத்தில் ஏந்தி மருதாநதிக்கு சென்றனர். அங்கு பூ எருக்களில் தீபம் ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு நடத்தினர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், காடு கரை செழிக்க வேண்டி கும்பியடித்து பூஜை செய்கிறோம். நம் முன்னோர்களின் வழியினை இளைய தலைமுறையினரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக சிறுமிகளுக்கும் இதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறுகிறோம். இந்த பாரம்பரிய விழா, பெண்கள் ஒன்று கூடி மகிழ்வதற்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது என்றனர்.