அரசு ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை இணைய வழியில் சமர்ப்பிக்கும் திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியல்களை இணைய வழியில் சமர்ப்பிக்க, ஒங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தொடக்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டக் கருவூலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊதியப் பட்டியல்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் ஒங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் திட்டத்தினை, மதுரை மண்டலக் கருவூல இணை இயக்குநர் மு. தவசுகனி தொடக்கி வைத்துப் பேசியது:
இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டக் கருவூலம் மற்றும் 8 சார்-நிலைக் கருவூலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 27ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியலை, மாவட்டத்திலுள்ள 564 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணைய வழியில் இனி தாக்கல் செய்வர்.
எனினும், ஜனவரி மாதத்துக்கான ஊதியப் பட்டியல் இணைய வழியில் மட்டுமின்றி, வழக்கமான நடைமுறையிலும் (ஏடிபிபி) தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் மாதம் என்பதால் இணைய வழியில் பதவிவேற்றம் செய்யும்போது தவறு இழைக்கப்பட்டு, எந்தவொரு ஊழியருக்கும் ஊதியம் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அப்போது, மாவட்டக் கருவூல அலுவலர் க. சரவணன் உடனிருந்தார்.