கொடைக்கானல் மன்னவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முருகானந்தம் தலைமை வகித்தார். கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய அதிமுக செயலர் வி.கே.முருகன் 2017-18-ம் ஆண்டில் படித்த பள்ளி மாணவ, மாணவிகள் 54 பேருக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய உரம் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி முருகன் மற்றும் கொடைக்கானல் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் 2018-19-ஆம் ஆண்டில் படிக்கும் மாணவ, மாணவிகள் 64 பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனத் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.