திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கல்குழியில் தேங்கிய மழைநீரில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
வேடசந்தூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சிவக்குமார்(12). வேடசந்தூர் அடுத்துள்ள நாககோனானூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் ஆணை பிரபு(12). இவர்கள் இருவரும், வேடசந்தூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் விடுமுறை நாளான சனிக்கிழமை, சக நண்பர்களுடன், வேடசந்தூர் வடமதுரை சாலையிலுள்ள லக்கனப்பாறை என்ற கல்குழியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவர்கள் சிவக்குமார் மற்றும் ஆணை பிரபு ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதைக் கண்ட சக சிறுவர்களின் அலறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.