கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை முன்விரோதத்தில் தாய் மற்றும் தம்பிகள் உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டியதாக தம்பதியை போலீஸார் தேடிவருகின்றனர்.
கொடைக்கானல் அருகே உள்ள கோம்பை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அய்யர் தேவர் மனைவி மீனாட்சி (60). இவருக்கு ஜெயக்குமார், முத்துராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 மகன்கள். இவர்கள் அனைவரும் அதே பகுதியில் மீனாட்சியம்மாளுக்கு சொந்தமான இடத்தில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் ஜெயக்குமார் வீட்டில் மட்டும் மின் இணைப்பு உள்ளது.
இந்நிலையில் முத்துராஜ் மற்றும் இவரது தாயார் குடியிருந்து வரும் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு ஊழியர்கள் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை வேலை செய்துள்ளனர். அப்போது அவர்களை ஜெயக்குமார் வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் தனது தாயாரிடமும் பிரச்னை செய்து தான் வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்க முயற்சி செய்துள்ளார். இதனை அங்கிருந்த சதீஷ்குமார் மற்றும் அவர்களது உறவினர்களான லட்சுமி, சின்னச்சாமி ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஜெயக்குமார் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த நால்வரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ள சதீஷ்குமார் (29), மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து சதீஷ்குமார் கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோரை தேடி வருகின்றனர்.