திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
சாணார்பட்டி அடுத்துள்ள கூவனூத்து குரும்பப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே வறட்சி காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால், ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சில நாள்கள் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டதாம்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, மேலாளர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் முறையான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததோடு, தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.