சாணார்பட்டி அருகே மணல் கடத்தலை தடுத்த பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த பாஜக ஒன்றியச் செயலர் தனபால். இந்நிலையில், கடம்பவனம் பகுதியில் சிலர் மணல் அள்ளியதாகவும், அதனை அப்பகுதி மக்களுடன் சென்று தனபால் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மணல் கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்திலும் தனபால் புகார் அளித்துள்ளார். இதனால், சரவணன் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், தனபால் சாணார்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.