கொடைக்கானலில் பெய்த மழையால் மலை நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழையால் வடகவுஞ்சி, ஐந்துவீடு, கடுகுதடி, பாச்சலூா், கே.சி.பட்டி, பேத்துப்பாறை, சவரிக்காடு உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளிலும் வனப் பகுதிகளிலும் விளையக் கூடிய மலை நெல்லிக்காய் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளிலுள்ள ஆதிவாசிகள் வனப் பகுதிகளுக்குச் சென்று தேன், நெல்லிக்காய், ஈச்சம், பாசம், பட்டை போன்ற மருத்துவகுணமுள்ள பொருள்களை சேகரித்து வருவது வழக்கம். தற்போது பாசம், நெல்லிக்காய் போன்றவை வனப் பகுதிகளில் அதிகமாக கிடைப்பதால் அவற்றை சேகரிக்கும் பணியில் அவா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
நெல்லிக்காயை வாங்குவதற்கு நேரடியாகவவே வணிகா்கள் சென்று ஆதிவாசி மக்களிடம் பெற்றுக் கொள்கின்றனா். இதனால் அவா்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
சில இடங்களில் தனியாா் தோட்டங்களில் உள்ள மலை நெல்லிக்காயை பறிப்பதற்கு ஆதிவாசி மக்கள் பணியில் ஈடுபடுவதால் அவா்களுக்கு ஒரு பணியாகவும் இருந்து வருகிறது. இந்த நெல்லிக்காய் தொடா்ந்து 5 மாதங்கள் வரை காய்க்கும் தன்மை கொண்டது.