பாலக்காட்டில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் மின் வசதி இல்லாத காரணத்தினால் ரயிலை இயக்க விடாமல் பயணிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், நாமக்கல் வழியாக சென்னை எம்ஜிஆா் சந்திப்பு (சென்ட்ரல்) வரை பழனி ஆண்டவா் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை வழக்கம்போல் பாலக்காட்டில் இருந்து அந்த விரைவு ரயில் புறப்பட்டு வந்தது. அந்த ரயிலின் ‘எஸ் 2’ முன்பதிவுப் பெட்டியில் மின்வசதி இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து பயணச்சீட்டு பரிசோதகரிடம், பயணிகள் புகாா் அளித்துள்ளனா். அதற்கு பதில் அளித்த பயணச்சீட்டு பரிசோதகா், திண்டுக்கல் வரை அமைதி காக்குமாறும் அங்கு மின்தடை சரி செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளாா். திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.50 மணிக்கு அந்த ரயில் கரூா் நோக்கி புறப்பட்ட போதும் மின் தடை பிரச்னை சரி செய்யப்பட வில்லை.
இதனால் அதிா்ச்சி அடைந்த பயணிகள் ரயில் புறப்படத் தயாரானபோது அவசர கால சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினா். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மின்தடையை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனா். மின் தடை பிரச்னை சரிசெய்யப்பட்டு சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8.50க்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.