மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், திண்டுக்கல்லில் சனிக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில் நடைபெற்ற இப்போட்டி சார்பு ஆட்சியர் சாலையிலுள்ள பழைய நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கியது. இதில் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியை, மாவட்ட தேர்தல் அலுவலர் டிஜி.வினய் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
இப்போட்டி 5 கி.மீ. தொலைவிலுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நிறைவடைந்தது.
முதல் 10 இடங்களில் வெற்றிப் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 20 பேருக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் வினய் வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.