திமுக பிரமுகர் வீடு, வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திண்டுக்கல்லில் திமுக மாநில நிர்வாகியின் வீடு மற்றும் வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லில் திமுக மாநில நிர்வாகியின் வீடு மற்றும் வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
  திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே, திமுக மாநில வர்த்தகர் அணி இணைச் செயலர் ஜெயன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்கு எதிரே அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். 
 வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மணிகண்டன் சென்ற காரை வழிமறித்து சோதனையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், பின்னர் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
  அதன்பேரில், மணிகண்டன் வீட்டிலும் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை என கூறிவிட்டு வெளியேறினர். இதனிடையே மணிகண்டன் வீட்டின் மாடியில் திமுக பிரமுகர் ஜெயன் வசித்து வரும் வீடு மற்றும் அவரது  வணிக வளாகம் ஞாயிற்றுக்கிழமை பூட்டப்பட்டிருந்தது. அவர் கோவை சென்றுவிட்டதால், அந்த வீட்டில் சோதனையிட முடியாத வருமான வரித்துறையினர், திங்கள்கிழமை காலை மீண்டும் சோதனையிடச் சென்றனர். ஜெயன் வீடு மற்றும் வணிக நிறுவனத்தில் காலை 7 முதல் 11 மணி வரையிலும் இந்த சோதனை நீடித்தது. 
  சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போதும் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அலுவலர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் மற்றும் போலீஸார் சோதனை மேற்கொண்டது, இந்திராநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com