தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 230 சிஆர்பிஎஃப் வீரர்கள் ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுமார் 10,600க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு 2 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டத்திலுள்ள 2,100 போலீஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும், முறைகேடுகளை தடுக்கவும் சிஆர்பிஎஃப் வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக 230 வீரர்கள் கொண்ட 3 கம்பெனி படையினர் திண்டுக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். இந்த வீரர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை முதல் கொடி அணி வகுப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.