திண்டுக்கல் நகரிலுள்ள வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.ஜி. வினய் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, டி.ஜி. வினய் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,094 வாக்கு சாவடிகளில் 137 வாக்கு சாவடிகள் தாக்குதலுக்குள்படலாம் என்றும், 148 வாக்கு சாவடிகள் நெருக்கடி நிறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்கு சாவடிகளுக்கு, மத்திய அரசு அலுவலர்களை நுண்பார்வையாளர்களாக நியமித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் நாளான வியாழக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாகவும், தொடர்பு வசதி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் - 1800 425 5965 மற்றும் 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாலச்சந்திரன், மாநகர் நல அலுவலர் அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.