சிறுமி மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு புதன்கிழமை உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
அய்யலூர் அடுத்துள்ள ஜி.குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். அவரது 12 வயது மகள், வாயில் மின் வயரைக் கடித்த நிலையில் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அதே நேரத்தில், அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் நகக் கீறல்கள், காயம் இருப்பது கண்டறியப்பட்டது. 
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, திடீரென உயிரிழந்தது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பி வைத்தனர். 
இதனிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமான அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிறுமியின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபின், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com