திண்டுக்கல்லில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் பெண்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 41ஆவது வார்டுக்குள்பட்ட யூசுப்பியா நகர் மற்றும் கரீம் தெரு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காலிக் குடங்களுடன் வத்தலகுண்டு சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் பதித்த பின் சீரான குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், புதிய குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த போதிலும், கடந்த 3 மாதங்களாக 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முழுமையாக குடிநீர் வழங்கப்படவில்லை. மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அலுவலர்களின் சமரசத்தை ஏற்க மறுத்த பெண்கள், குடிநீர் கேட்டு தொடர்ந்து கோஷமிட்டனர். பின்னர், கரீம் தெரு மற்றும் யூசுப்பியா நகர் பகுதிகளுக்கு மாற்று வழியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியது: பூச்சிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள மேல்நிலைத் தொட்டியிலிருந்தே யூசுப்பியா நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், யூசுப்பியா நகர் மேடான பகுதி என்பதால், தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், சவேரியார்பாளையம் மேல்நிலைத் தொட்டியிலிருந்து தண்ணீர் வழங்க மாற்று வழி கண்டறியப்பட்டது. ஆனால், ஞானபிரகாசபுரம் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே, யூசுப்பியா நகருக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்னை நீடித்து வருகிறது. எனினும், குடிநீர் பிரச்னைக்கு துரிதமாக தீர்வு காணப்படும் என்றனர்.