தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும் என, திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விழாவுக்கு, நலப் பணிகள் இணை இயக்குநர் ஜெ. மாலதி பிரகாஷ் தலைமை வகித்தார். மருத்துவமனைக் கண்காணிப்பாளர் இரா. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
பின்னர், பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் மாலா, அசோக் பாண்டியன் ஆகியோர் பேசியதாவது: குழந்தை பிறந்த முதல் 3 நாள்களுக்கு தாயிடமிருந்து கிடைக்கும் சீம்பால் இம்மியூனோ குளோபுலின் என்ற எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும். 30 மில்லி முதல் 50 மில்லி தாய்ப்பால் முதல் நாளில் கிடைத்தால் கூட குழந்தைக்கு போதுமானதாகும். சுக பிரசவத்தின்போது உடனடியாக குழந்தைக்கு பால் கொடுத்தால், அதன் உறிஞ்சும் தன்மையால் தாய்க்கு கூடுதலாக பால் சுரக்கும். அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட தாய்மார்கள் 30 நிமிடங்களில் பால் கொடுக்கலாம்.
வீட்டிலுள்ள பெரியவர்கள், தாய்ப்பாலுடன் சேர்த்து பசும் பால் கொடுக்க அறிவுறுத்துவது வழக்கம். ஆனால், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. அதனை மாற்றுப் பொருள்களின் மூலம் பூர்த்தி செய்யமுடியாது.
தாய்ப்பாலின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் தொற்று கிடையாது. அமினோ அமிலம் மூலம் மூளை வளர்ச்சி மேம்படும். உடல் பருமனை கட்டுப்படுத்தும். எதிர்காலத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருத நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படும். முதல் ஒரு வயதுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்தால் ஆஸ்துமா பாதிப்பு இருக்காது எனத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை நிலைய அலுவலர் மகாலட்சுமி, துணை இயக்குநர்(காசநோய்) ராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் சார்பில் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.