ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சாலை மைய தடுப்புச்சுவரில் கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழனி-திண்டுக்கல் சாலை மற்றும் தாராபுரம் சாலையில் சாலையின் மைப்பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடுப்புச் சுவர் மீது சிலர் ஏறி, மறுபகுதிக்குச் செல்வதால், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் மோதி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரித்து, அதன் மேல் பகுதியில் இரும்பு கம்பியால் தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்தனர். அதன்படி செவ்வாய்க்கிழமை ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் ஆங்காங்கே கம்பி பதிக்கும் வகையில் இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதனால் வாகன விபத்துக்கள் குறையும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.