பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை கிருத்திகை மற்றும் தொடர் விடுமுறையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை நான்கு மணிக்கே சன்னிதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.
மேலும், வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜயந்தி வந்ததால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கம்பி வட ஊர்தி ( ரோப்கார்) இல்லாத காரணத்தாலும் மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இழுவை ரயில் (வின்ச்) நிலையத்தில் அதிகம் காணப்பட்டது. கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதிகக் கூட்டம் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு சுமார் 3 மணி நேரமானது.
அகில உலக திருமுருக பக்த சபா சார்பில் நடைபெற்ற பக்திச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் வெங்கட்ரமணன், முனைவர் தேவி சண்முகம் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர். கோயில் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இரவு தங்கமயில் புறப்பாடு மற்றும் தங்கத்தேர் புறப்பாட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
அமைச்சர் தரிசனம்: பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். தண்டாயுதபாணி சுவாமியை சாயரட்சையின் போது தரிசனம் செய்த அவர் தங்கத்தேர் புறப்பாட்டிலும் பங்கேற்றார்.