திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, உலுப்பகுடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தக் குடங்களுடன் சந்தனகருப்பு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், அங்கிருந்து கோயில் நிர்வாகத்தினர், பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடனும், சிங்கார வர்ணக்குடையுடனும் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், 15 நாள் விரதம் தொடங்குவதற்காக மஞ்சள் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.