திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பள்ளிப் பகுதியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 1.7 கிலோ கஞ்சாவை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
வத்தலகுண்டு அடுத்துள்ள தேவரப்பன்பட்டியில் பள்ளியின் அருகே மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாரிடம் அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையிலான போலீஸார், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த ரவி மனைவி பாண்டியம்மாள்(40), கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதையடுத்து பாண்டியம்மாளை பிடித்த போலீஸார், அவரது வீட்டிற்கு சென்றும் சோதனையிட்டனர். அதில், 1.7 கிலோ கஞ்சா சிக்கியது. அதைத்தொடர்ந்து பாண்டியம்மாளை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.