உலக திறனாய்வுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்ட அளவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 1300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில், 2018-19 ஆம் ஆண்டிற்கான உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் திண்டுக்கல் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கிலும், பழனி கல்வி மாவட்ட மாணவர்களுக்கு வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன. 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றிபெற்ற 144 மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மண்டல அளவிலான போட்டிகளில் முதல் பத்து இடங்களில் வெற்றி பெறும் 360 மாணவர்களுக்கு தலா ரூ.6000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மேலும், விளையாட்டு விடுதி, விளையாட்டு பள்ளி மற்றும் விளையாட்டு அகாதெமியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.