பழனி அடிவாரம் கிரி வீதியில் வீர துர்க்கையம்மன் கோயில் வளாகத்தில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப் பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.
இந்த கோயிலின் பின்புறம் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இக்கோயில் வளாகத்தில் பெரிய மலைப்பாம்பு இருப்பதை பார்த்த கோயில் பாதுகாவலர்கள், பாம்பு பிடிக்கும் நிபுணர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அங்கு சென்ற நடராஜன், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி மலைப்பாம்பை பிடித்து சாக்குப் பையில் அடைத்து கட்டினார்.
பிடிபட்ட மலைப் பாம்பு 15 அடி நீளமும், சுமார் 70 கிலோ எடையுடனும் இருந்தது. பின்னர், மலைப் பாம்பு வனத் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத் துறையினர், கொடைக்கானல் வனச்சரகத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் மலைப் பாம்பை கொண்டு சென்றுவிட்டனர்.