திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் பாதாளச் சாக்கடை கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு, மாநகராட்சியின் பாதாளச்சாக்கடை கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என நாள்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெறுகின்றனர். இந்நிலையில் ரூ.18 கோடி செலவில் தாய் சேய் நல சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 தளங்களாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்திற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையில், மருத்துவமனையிலுள்ள கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான திட்டம் இணைக்கப்பட்டது.
இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு மாற்றாக, திண்டுக்கல் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடையுடன் இணைத்து வெளியேற்றும் வகையில் அந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனை வளாகத்தில் 29 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, பாதாளச் சாக்கடைத் திட்டத்துடன் இணைத்து வெளியேற்றுவதற்கான பணிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதாளச் சாக்கடைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ.50 லட்சத்திற்கான நிதியையும் மாநகராட்சிக்கு, பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியது: ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த நிதியிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.50 லட்சத்திற்கான நிதி, திண்டுக்கல் மாநகராட்சியின் பாதாளச்சாக்கடை தனி அலுவலக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், மருத்துவமனை வளாகத்தில் 29 இடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாளச்சாக்கடை மூலம் முற்றிலுமாக வெளியேற்றப்படும் என்றார்.