ஒட்டன்சத்திரம் அருகே மின்வயரை திருடிய 6 இளைஞர்களை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களில் ஏராளமானோர் இரவு நேரங்களிலும் நடந்து செல்கின்றனர். அவர்களுக்காக, விபத்து ஏற்படாத வண்ணம், பழனி தேவஸ்தானம் சார்பிலும், திண்டுக்கல் முதல் பழனி வரையும், செம்பட்டியிலிருந்து மூலச்சத்திரம் வரையும் மற்றும் அந்தந்த ஊராட்சிகள் சார்பிலும் சாலை ஓரங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூலச்சத்திரம் அடுத்துள்ள புதுஎட்டமநாயக்கன்பட்டி அருகே பழக்கனூத்து ஊராட்சி சார்பில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த மின்விளக்குகளுக்குச் செல்லும் மின்வயரை வெட்டி, ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்றது. தகவலறிந்த புதுஎட்டமநாயக்கன்பட்டி பொதுமக்கள், அந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்து, அதில் இருந்தவர்களை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் நிலக்கோட்டையைச் சேர்ந்த பால்ராஜ் மகன் அழகர் (22), மல்லணம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் காமாட்சி (16), சேகர் மகன் செல்வக்குமார் (19), கதிரேசன் மகன் வேலு (23) மற்றும் நிலக்கோட்டையைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் தினேஷ் (26), பாண்டி மகன் முருகபாண்டி (16) எனத் தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் திருடிய 500 மீட்டர் மின்வயர், கூம்பு வடிவ ஒலிபெருக்கி குழாய் ஆகியவற்றை மீட்ட போலீஸார், அவர்கள் வந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பழக்கனூத்து ஊராட்சி செயலர் லிங்கசாமி அளித்த புகாரின்பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். பின்னர், ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திண்டுக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.