பழனி மலைக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தருமபுரியை சேர்ந்தவர் தனசேகரன் (40). இவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஊரிலிருந்து பழனிக்கு தனியாக பாதயாத்திரை வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்கத்தேர் பார்த்துள்ளார்.
அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக ரோப்கார் மூலம் கீழே கொண்டு வரப்பட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மலையில் மருத்துவர் ஒருவரை நியமித்து தற்காலிக மருத்துவமனை வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுவரை முதலுதவி சிகிச்சையின்றி பல உயிரிழப்பு நேர்ந்துள்ளது.
தற்போது தைப்பூச கூட்டம் அலைமோதும் நிலையில் இனிமேலாவது உயிரிழப்பை தவிர்க்க மலைக்கோயிலில் மருத்துவரை நியமிக்க வேண்டுமென இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.