"மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 75 சதவீத இடங்களை வெல்லும்'
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 75 சதவீத இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் அகில இந்திய யாதவ மகாசபை தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு நடைபெற்ற அன்னதானத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை 75சதவீத இடங்களைப் பாஜக கூட்டணி வெல்லும் வாய்ப்புள்ளது. கொடநாடு எஸ்டேட் பிரச்னைக்கு தகுந்த ஆதாரங்கள் தேவை. அது இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமை. விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். வளரும் தமிழ்நாடு வேண்டுமா, வீழும் தமிழ்நாடு வேண்டுமா என்பதில் மக்கள் முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.
நீண்ட நெடுங்காலமாக இயங்கும் தொழிற்சாலைகளை முடக்க அரசியல்வாதிகள் போர்வையில் சில தீயசக்திகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற தீய சக்திகளை விரட்டி விவசாயம், கல்வி, தொழிற்துறை போன்றவற்றில் தமிழகம் சிறந்து விளங்க அதற்கு வேண்டிய கட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். தமிழக அரசு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி அவர் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட தலைவர் பழனிச்சாமி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.