கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என அக்கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியில் வியாழக்கிழமை தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கான அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் கூறியது: பழனி கோயில் தைப்பூச விழாவிற்கு கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு போதிய அளவு தங்கும் வசதி செய்து தரவில்லை. கோயில் இடங்களை வணிகவளாகங்களாக மாற்றி வருகின்றனர். "சாலிட்வேஸ்ட்' மூலம் விபூதி தயாரிப்பதாக தகவல் வருகிறது. இவற்றை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. கொடநாடு விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
கர்நாடகாவில் எம்எல்ஏ க்களை நாங்கள் மனிதர்களாக பார்க்கிறோம். அதனால் அங்கு பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தட்டும். தொடர்ந்து குழப்பம் நீடிக்கட்டும். காங்கிரஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததற்காக இப்போது வருத்தப்படுகின்றனர். மத்தியப்பிரதேசத்தில் உரத்துக்காக நின்ற விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. பாஜக ஆட்சியில் இருந்த போது இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்றார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்டச் செயலாளர் கனகராஜ், விஹெச்பி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.