நத்தத்தில் தகாத தொடர்பு காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்த பிரபு (32) புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி அருணாதேவியுடன் ஏற்பட்ட தகாத தொடர்பு காரணமாக பிரபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, தப்பியோட முயன்ற சண்முகத்தை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பிரபு கொலைக்கு காரணமான மேலும் 4 பேரை கைது செய்யக் கோரி நத்தம் அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல் சாலையில் அவரது உறவினர்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை கைது செய்யும் வரையிலும் பிரபுவின் சடலத்தை வாங்க முடியாது என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், கொலையாளிகளை துரிதமாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.