உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி பரிசு மற்றும் சான்றிதழை வியாழக்கிழமை வழங்கினார்.
உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நலப் பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ் தலைமை வகித்தார். குடும்ப நல துணை இயக்குநர் கோ.பூங்கோதை முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியால் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்கும் மக்கள்தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களின் விவரங்களின் அடிப்படையில் அந்தப் பகுதிகளில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற மாணவிகள், மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.