ஒட்டன்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு தரப்பினர் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே மண்டவாடி ஊராட்சி சி.கே.வலசு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட காளியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 48 நாள்கள் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விழாவின்போது, கோயில் நிர்வாகத்தினர் வழங்கிய அன்னதானத்தில் ஒரு தரப்பினரிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவர்கள் அம்பிளிக்கை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், உடன்பாடு ஏற்படாததால், ஒரு தரப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதன் பின்னர், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் என்.கே. சரவணன் தலைமையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், அமாவாசை தினத்தன்று ஒரு தரப்பினர் தலைமையில் சுவாமி தரிசனம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொள்ளவும், மற்றொரு தரப்பினர் பௌணர்மி தினத்தன்று சுவாமி தரிசனம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொள்வது என உடன்பாடு ஏற்பட்டது.