ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 9-ஆவது வார்டு காய்கறி சந்தைக்கு செல்லும் வழியில் புதிதாகக் கட்டப்பட்ட சாக்கடையில் கழிவுநீர் செல்ல முடியாமல், குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் பாதையில் தேங்கி நின்றது.இதனால், இப்பகுதியினர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, மோட்டார் மூலம் கழிவுநீரை வெளியேற்றி வந்தனர். இதனிடையே, சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் பெய்த மழையால், கழிவு நீருடன் மழைநீர் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றது. இவற்றை பார்வையிட வந்த நகராட்சி ஆணையர் தேவகியை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, சாலையின் வடக்கு பகுதியில் குழாய் அமைத்து, அதன்மூலம் கழிவுநீரை வெளியேற்ற, கடந்த 2 நாள்களாக சிமெண்ட் குழாய் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறிச் சந்தைக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளதால், பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.