பிரதமரின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளைப் போல் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் உதவித் தொகை வழங்கும் பணி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் முறையாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்துவதாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இதுவரையிலும் இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் நிலம் இருந்தால், அதற்கான இறப்புச் சான்றுடன் இறந்தவரின் வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி தேவையான ஆவணங்களுடன் உரிய முறையில் விண்ணப்பித்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.
இதற்கான வாய்ப்பாக தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தி முகாமில் விவசாயிகள் மனு அளிக்கலாம். அதன் மூலம் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.