திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனார், வீரன் சுந்தரலிலிங்கம் படத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் சாணத்தை எறிந்து சென்றிருந்ததால் செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பட்டி அடுத்த, நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் ஒட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500 வீடுகள் உள்ளன. சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கின்றனர். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் ஊருக்கு நுழையுமிடத்தில் நெடுஞ்சாலையில் தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிலிங்கம் படத்துடன் பெயர் பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இந்த பலகை மீது மர்ம நபர்கள் சிலர் சாணத்தை எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதையடுத்து அந்த கிராம மக்கள் சுமார் 200 பேர் செம்பட்டி-நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி.பாலகுமார் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.