பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் உபகோயில்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை திருஆவினன்குடி கோயிலில் குழந்தைவேலாயுதசாமிக்கும், செவ்வாய்க்கிழமை பெரியநாயகியம்மன் கோயிலில் பெரியநாயகியம்மன் மற்றும் கைலாசநாதருக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பழனி கண்பத் கிராண்ட் உபயமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது உற்சவர் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டு மயூரயாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் கைலாசநாதர், வள்ளி, தெய்வானை சமேதர் சோமாஸ்கந்தர், பெரியநாயகியம்மன், சிவகாமி அம்பாள் சமேதர் நடராஜர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள், சோடஷ தீபாராதனை நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
வில்வம் கலந்து அன்னம் சன்னிதிகளில் பீடம் வரை நிரப்பப்பட்டு, சிரசில் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் டிஎஸ்பி விவேகானந்தன், கோயில் கண்காணிப்பாளர் முருகேசன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, இயக்குநர் செந்தில்குமார், இந்து அமைப்பு நிர்வாகி ராம.ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதன்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக பழனி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.