பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கந்தசாமி தலைமை வகித்தார். பதஞ்சலி அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஸ், ஒப்பந்ததாரர் நேரு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து உதவியாளர் அசோக்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில், தேவி மெட்ரிக்குலேஷன் பள்ளி, விவேகானந்தா பள்ளி, சிறுமலர் நடுநிலைப் பள்ளி, பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சுவாமி தயானந்த குருகுலம் என ஏராளமான பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களுடன் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களும் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி ஆசிரியர்கள் ராமச்சந்திரன், ராஜேஷ், பத்மாவதி உள்பட பலர் செய்திருந்தனர். முன்னதாக, யோகா ஆசிரியர் முருகன் வரவேற்றார்.