கொடைக்கானலில் வனச்சூழல் பாதுகாப்பு குறித்த 11-ஆவது தேசிய மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டை, ஜே.ஐ.சி.ஏ. என்ற சர்வதேச அமைப்பும், வனத் துறையும் இணைந்து நடத்தின. இதில், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப அடிப்படையில் காடுகளைப் பாதுகாப்பது, மதிப்பிடுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலர் சம்புகல்லோலிகர் தொடக்கி வைத்தார். இதில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான ஹைதராபாத் தேசிய தொலை உணர்வு மையம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், வனப் பாதுகாப்பு மையம், கோவை வன மரபியல் மற்றும் இனப்பெருக்க மையத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, தொழில் ரீதியான கருத்தை தெரிவித்தனர்.
பின்னர், ஜே.ஐ.சி.ஏ. அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் டோருயும்மாச்சி பேசியது: இந்த அமைப்பானது இந்திய அரசுடன் 30 ஆண்டுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது.
வன மேம்பாடு பற்றியும், இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் பற்றியும் நடத்தப்படும் இந்த மாநாடு, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவியாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து, இவ்வமைப்பின் கூடுதல் தலைமை மேம்பாட்டு நிபுணர் வினித் சரின் பேசியதாவது: இதில், 14 மாநிலங்களில் 27 திட்டங்களுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது. உத்தரகண்ட்டில் இந்த அமைப்பின் மூலம் பேரிடர் மேலாண்மை செயல்பட்டு வருகிறது என்றார்.
மாநாட்டில், தலைமை வனப் பாதுகாவலர்கள் சையது முஸம்மில் அப்பாஸ், உபாத்யாய், மல்லேசப்பா, ஜே.ஐ.சி.ஏ. அமைப்பின் சஞ்சய் ஸ்ரீவத்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், வன மேம்பாடு, சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டு, தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.