கொடைக்கானலில் 4 ஆவது ஆண்டு தேசிய அளவிலான கராத்தே போட்டி, லியோ கோஜூ ராயு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் 6 வயது முதல் 30 வயது வரை உள்ள போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியை தலைமை பயிற்சியாளர் முத்தையா தொடக்கி வைத்தார். முடிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இப் போட்டிகள் ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டியில் சீனியர் பிரிவில் வெற்றி பெற்றவருக்கு சிறப்பு பரிசு மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
போட்டியின் நடுவர்களாக ராஜ்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் இருந்தனர். தமிழகத்திலிருந்து மதுரை, சென்னை, கோவை, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தவர்கள் அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர் என கராத்தே சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.