வத்தலகுண்டில் ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை நடத்தவிருந்த காத்திருப்புப் போராட்டத்தை ஜூன் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலகம் முன்பாக, மணிவானன் என்பவருக்கு பதவி உயர்வு ரத்து செய்து வழங்கப்பட்ட உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டும். அவரது பணிப் பதிவேட்டை ஆய்வு செய்து முறையான உரிமைவிடல் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். 1.1.2008 நிலையில் முறையான முன்னுரிமைப் பட்டியல்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். மாணவர்கள் இல்லாத சின்னூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 1.6.2018 ஆம் ஆண்டு முதல் பணியாற்றும் வீரராம்பிரபுக்கு வேறு பள்ளிக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என, ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கூட்டணியின் மாநிலத் தலைவர் குன்வர்சோசுவாவளவன், மாவட்டத் தலைவர் தேவ்வாட்சன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்டப் பொருளாளர் ரமேஷ், வத்தலகுண்டு வட்டார நிர்வாகிகள், கொடைக்கானல் நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
இதையறிந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட நிலக்கோட்டை பயிற்சி டி.எஸ்.பி. பிரேம், வத்தலகுணடு சார்பு-ஆய்வாளர் கண்ணாகாந்தி மற்றும் போலீஸார் வந்தனர். இந்நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன், போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரம் கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட ஆசிரியர் கூட்டணியினர், ஜூன் 3-ஆம் தேதிக்கு போராட்டத்தை ஒத்தி வைப்பதாகக் கூறி, கலைந்து சென்றனர்.