பழனி அருகே அமரபூண்டியில் கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத குழந்தைகள் மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பழனியை அடுத்த அமரபூண்டி ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு செயல்பட்டு வரும் குழந்தைகள் மையத்தில் 50-க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் இந்த மையத்தில் போதிய இடவசதி இல்லாதது, சேதமடைந்த நிலையில் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் ஒட்டன்சத்திரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் சக்கரபாணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் குழந்தைகள் மையம் கட்டப்பட்டது.
கடந்த 2012-13 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு குழந்தைகள் மையம் கட்டப்பட்டு முழுமையாக கட்டடப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் குழந்தைகள் மையக் கட்டடம் திறக்கப்படவில்லை.
தற்போது இந்த கட்டடம் கட்டப்பட்டு சுமாா் 8 ஆண்டுகள் ஆகியும் அரசியல் காழ்புணா்ச்சி காரணமாக இந்த கட்டடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அப்பகுதியினா் ஆடு, மாடுகளை கட்டி பயன்படுத்தி வருகின்றனா். எனவே இந்த குழந்தைகள் மையத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.