ஒட்டன்சத்திரம் பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் பழங்களை ரசாயனம் கலந்த தண்ணீரில் பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஒட்டன்சத்திரம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி கே.மோகனரங்கம் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை, ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழக்கடை மற்றும் வாழைப்பழ கிடங்கு மற்றும் சாலையோரக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 கிலோவுக்கு மேலான மெழுகு தடவிய ஆப்பிள் மற்றும் அழுகிய வாழைப்பழங்களை கைப்பற்றி அழித்தனா். அதே போல பழக்கடை அனைத்தும் உரிமம் பெற்று நடத்த வேண்டும் என்றும், ரசாயனம் கலந்த தண்ணீரை கொண்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தால் கடைக்காரா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தாா்.