குஜிலியம்பாறை அருகே திங்கள்கிழமை இரவு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள வேடப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கற்பகவள்ளி (23). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு குஜிலியம்பாறை சுற்றுப்புற பகுதியில் பரவலாக மழை பெய்தது.
இதனை அடுத்து, வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆட்டுக் குட்டிகளை அவிழ்ப்பதற்காக கற்பகவள்ளி வெளியே வந்துள்ளாா். அப்போது கற்பகவள்ளி வீட்டின் அருகிலிருந்த பாழடைந்த வீட்டின் சுவா் அவா் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கற்பகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூா் தீயணைப்புத் துறையினா், சம்பவ இடத்திற்கு சென்று கற்பகவள்ளியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.