பீட்டர் டேவிட் அறிவாலயம் அரசுப் பள்ளியில், பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரி மாணவியர்க்கு தகுதி மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பழனி குபேரபட்டினத்தில் உள்ள பீட்டர் டேவிட் அறிவாலயம் அரசு இடைநிலைப் பள்ளியில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியின் ஆங்கிலத் துறை உயராய்வு மையம், முதுநிலை மற்றும் எம்.ஃபில். மாணவியர்க்கு ஒருவார காலம் தகுதி மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆசிரிய பயிற்சித் திறன் என்ற பொருளில் வழங்கப்பட்ட இந்தப் பயிற்சியில், 26 கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். பழனியாண்டவர் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் செல்வி தலைமையில், கல்லூரி மாணவியர் பள்ளி மாணவ, மாணவியர்க்கு அடிப்படை ஆங்கில இலக்கணம், ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி, ஆங்கில நாடகப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கினர்.
வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தொடர்ந்து, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், இதனால் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவியர்க்கும் இடையிலான கற்றல், கற்பித்தல் மேம்பாடு பெறுவது குறித்தும் விளக்கினார்.
பழனி நகர் கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளிச் செயலர் சரோஜா அழகுமலை, தலைமையாசிரியர் நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிறைவு நாள் நிகழ்ச்சியில், கல்லூரி மாணவியர் மற்றும் பள்ளி மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் கார்த்தியாயினி, மதுமிதா, சந்திரா, மணிமேகலை, செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.