"அம்மா' இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் தகுதி வாய்ந்த பணிபுரியும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணிக்குச் செல்லும் மகளிர் மற்றும் சிறு வணிகம் செய்யும் மகளிர் நலனுக்காக, தமிழக அரசு சார்பில் "அம்மா' இரு சக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டிற்கு மானியம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 18 முதல் 40 வயதுக்குள்பட்ட பணிபுரியும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளி 8ஆம் வகுப்பு பயின்று இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
ஏற்கெனவே மானியம் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. இருசக்கர வாகனம், மோட்டார் வாகனப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25ஆயிரம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயனாளிகள் வசிக்கும் தொடர்புடைய மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் வயது சான்று, இருப்பிட சான்று, சாதிச் சான்று, கல்விச் சான்று, வருமான சான்று, பணிபுரிவதற்கான சான்று அல்லது சுய தொழில் சான்று, ஓட்டுநர் உரிமம் அல்லது பழகுநர் உரிமம், மார்பளவு புகைப்படம், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகிய சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களின் கள ஆய்வுக்கு பின், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தகுதிவாய்ந்த மகளிர் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.