பழனியை அடுத்த ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவி செயல் அலுவலர் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்தாண்டு நவம்பர் 2 இல் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலை பணிகள் அடங்கிய 105 செயல் அலுவலர் பணிக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இரண்டு தாள்களை கொண்ட இந்த தேர்வை இந்து சமயத்தை சேர்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.
முதல்தாள் இந்து சமய இணைப்பும் விளக்கமும், இரண்டாம் தாள் பொது அறிவு என 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. கடந்தாண்டு பிப்ரவரி 16 இல் நடைபெற்ற இத்தேர்வை ஆயிரக்கணக்கானோர் எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 24 இல் வெளியானது. இதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு கடந்த 18 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை (செப்.20) வரை 3 நாள்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
இதில் ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜெயப்ரியா 680-க்கு 573 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இம்மையத்தில் பயின்ற 10 பேர் இத் தேர்வில் வெற்றி பெற்று செயல் அலுவலர் பணிக்கு தேர்வாகியுள்ளனர் என பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.