பழனி அருகே மருத்துவக் கழிவுகளை மர்மநபர்கள் கொண்டு வந்து கொட்டி தீவைத்து எரிப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பழனி அருகே உள்ளது கொழுமகொண்டான். இங்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இங்குள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் லாரிகளில் கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகளை, சிலர் கொட்டிவிட்டு தீ வைத்து விட்டு சென்று விடுவதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது: ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலங்களில் லாரிகளில் கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றிற்கு நெருப்பையும் வைத்து விடுவதால் கடும் தூர்நாற்றத்துடன் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு மற்றும் உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது.
இதுதொடர்பாக நில உரிமையாளரை விசாரணை செய்து, மருத்துவக் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.