ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை ஆன்மிக மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தும்மிச்சம்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சூர்யா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தயாநிதி, மாவட்ட பொருளாளர் பிரவீன், நகர இளைஞரணி பொறுப்பாளர் முத்துக்குமார், நகர செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ரவிபாலன் கலந்து கொண்டு, வரும் நவம்பர் 17-இல் சென்னையில் நடைபெற உள்ள ஆன்மிக அரசியல் மாநாடு குறித்து ஆலோசனைகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இம் மாநாட்டில் அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யதுரை நன்றி கூறினார்.