திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கொடைக்கானல் துப்புரவு பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் ஏரிச்சாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை கொடைக்கானல் நகராட்சி மேலாளர் குமார்சிங் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் பாண்டி செல்வம் வரவேற்றார். முகாமில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுப்பையா முகாமில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஒளித்திரை மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது, குப்பை உருவாக்குவதை எவ்வாறு குறைப்பது, மக்கும் குப்பைகளில் இயற்கை உரம் எவ்வாறு தயாரித்து விற்பனை செய்வது, துப்புரவு பணியாளர்களின் உடல் நலம் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. மேலும் திடக்கழிவுகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட கையேடுகளை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரி பிச்சைமணி மற்றும் 40-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமானது 2 நாள்கள் நடைபெறுகிறது.