பழனியில் கோயில் அர்ச்சகர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அருண்பாண்டியன் என்பவர் கேட்டிருந்த கேள்விகளில் கோயில் கருவறைக்குள் செல்லும் அர்ச்சகர்கள் குறித்து வருகைப் பதிவேடு பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விக்கு வருகைப் பதிவேடு இல்லை என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன் கண்டனம் தெரிவித்ததோடு, நவபாஷாண சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அர்ச்சக ஸ்தானீகர்கள் சங்க அலுவலகத்தில் 60-க்கும் மேற்பட்ட பூஜைமுறை அர்ச்சகர்கள் சனிக்கிழமை திரண்டு வந்து கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர்.
அப்போது நிர்வாக செயலர் சுந்தரேசன் பேசியது, பழனிக் கோயிலை பொறுத்தமட்டிலும் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் அர்ச்சகர்களுக்கு என தனியே பட்டா புத்தகம் பராமரிக்கப்படுகிறது. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பழனி கோயில் அர்ச்சகர்களின் வருகை பதிவேடு என்று கேட்ட கேள்விக்கு வருகை பதிவேடு இல்லை என்று கோயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
எனவே, பட்டா புத்தகம் குறித்து கேட்காமல் வருகை பதிவேடு என்று தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு கோயில் நிர்வாகம் சரியான பதிலை சொல்லியுள்ளது. முருகப் பெருமானின் திருமேனியை 30 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்த மகாராஜன் கமிட்டி 24 மணிநேரமும் தீர்த்த அபிஷேகம் செய்யப்படுவதால் கரையும் தன்மை அடைந்துவிடும் என்பதால் அபிஷேக முறையை குறைக்கவேண்டும் என்று பரிந்துரை செய்ததன் அடிப்படையிலேயே 6 காலபூஜையாக குறைக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.
இதை சிலை சேதமடைந்துள்ளது என பிரசாரம் செய்வது வருத்தமாக உள்ளது. சிலை சேதமின்றி உள்ளது. அதை பாதுகாப்பாக பராமரித்து வருகிறோம் என்றார்.