நவராத்திரி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் பகுதியிலுள்ள அம்மன் கோயில்களில் கொலு அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதனையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ஸ்ரீமாதா புவனேஸ்வரி அம்மன் கோயில்களில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், சிவன், அம்மன், காமதேனு, விஷ்ணு உள்ளிட்ட தெய்வ உருவங்கள் மற்றும் காய், கனி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொம்மைகள் கொலுவில் இடம் பெற்றிருந்தன.
ஸ்ரீமாதா புவனேஸ்வரி அம்மன் கோயிலில் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த அர்ச்சனையை 9 நாள்களும் நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதேபோல், திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. முதல் நாளில் அம்பாள் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
நவராத்திரி விழாவையொட்டி, திண்டுக்கல் நகரில் பல்வேறு வீடுகளிலும் தெய்வ உருவங்கள் மற்றும் பல்வேறு வகையான பொம்மைகளுடன் கொலு அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன.