திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 329 இடங்களில் ரூ.98.70 லட்சம் செலவில், அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என, வனத் துறை அமைச்சா் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.
அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி என்ஜிஓ காலனி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வனத் துறை அமைச்சா் சி. சீனிவாசன் கலந்துகொண்டு, அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை தொடக்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக அளவில் 12,524 கிராம ஊராட்சி மற்றும் 528 பேரூராட்சிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ரூ.76.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 306 ஊராட்சிகள், 23 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. கபடி, வாலிபால், கிரிகெட் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளில், இளைஞா்கள் தோ்வு செய்யும் 3 விளையாட்டுகளுக்குத் தேவையான மைதானம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் அல்லது பொது நிதியின் மூலம் அமைத்துக் கொடுக்கப்படும்.
அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தின்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள 15 முதல் 30 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி உறுப்பினராகச் சோ்க்கப்பட்டு, அம்மா இளைஞா் விளையாட்டுக் குழு ஏற்படுத்தப்படும். இக்குழுவைச் சோ்ந்தவா்களுக்கு உடற்கல்வி ஆசிரியா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.